Last Updated : 25 Feb, 2018 09:44 AM

 

Published : 25 Feb 2018 09:44 AM
Last Updated : 25 Feb 2018 09:44 AM

கோவையில் பேருந்தில் ரூ.75 லட்சம் நகை கொள்ளை: கும்பல் தலைவன் உ.பி.யில் கைது- காவலில் எடுக்க போலீஸார் தீவிர முயற்சி

கோயம்புத்தூரில் பேருந்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளை கும்பல் தலைவனை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்து கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கோவை வைசியாள் தெருவில் ஸ்வர்ண கலஷ் ஜுவல்லரியும் உள்ளது. இந்த கடையின் இரு ஊழியர்கள் கடந்த வருடம் அக்டோபர் 11–ல் தங்க நகைகளை விற்று விட்டு மீதமான ரூ.75 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோவுடன் இரவு கர்நாடகா அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நகைகளை பத்திரப்படுத்த வேண்டி பெட்டியில் போட்டு அதை தம் இருக்கைக்கு அடியில் வைத்து பயணம் செய்துள்ளனர். அப்போது, பேருந்தில் இருந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

விடியற்காலை கோவை சாய்பாபா பேருந்து நிலையத்தில் இறங்கும் போது பெட்டியை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி கோவை சி-3 காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க புதிதாக வந்த காவல் துறை தலைமை ஆணையர் பெரியய்யா தனிப்படை அமைத்தார். உதவி ஆணையர் சோமசேகரன் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரிந்தது.

அதன்பின் உ.பி. புலந்த்ஷெஹரின் காவல் துறை கண்காணிப்பாளரிடம் உதவி கோரப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றங்களுக்கு பெயர் போன அதன் மாவட்டத்தில், காவல்துறை கண்காணிப்பாளராக தமிழரான ஜி.முனிராஜ் உள்ளார். இவரது யோசனையின் பேரில் உதவி ஆய்வாளர் ஜெகந்நாதன் தலைமையில் ரமேஷ், யூசூப், வில்லியம் உட்பட 4 பேர் கடந்த 10-ம் தேதி புலந்த்ஷெஹர் சென்றனர். இவர்களுடன் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், இருளப்பன் ஆகியோர் பிறகு வந்து இணைந்தனர். பிறகு, புலந்த்ஷெஹர் மற்றும் தமிழக காவல் படையினர் இணைந்து கடந்த 14-ல் அஸ்லம் கான் (30) என்பவரை கைது செய்தனர். புலந்த்ஷெஹர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஸ்லம் கான், பிடிவாரன்டில் மறுதினம் விமானத்தில் கோவை கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த ஜி.முனிராஜ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இங்குள்ள பல கும்பல்கள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் கொள்ளை அடிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். உள்ளூரில் அவர்கள் கொள்ளை அடிப்பதில்லை. அஸ்லம் கானிடம் விசாரித்தால் மேலும் பல கொள்ளை கும்பல்களை பிடிக்கலாம். இதற்காக உபியில் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றும் என்னைபோன்ற 8 தமிழர்கள் உதவ தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அஸ்லம் கான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது வழக்கம். ஆனால், அஸ்லம் கானை போலீஸார் காவலில் எடுக்கவில்லை. நகைகளும் மீட்கப்படவில்லை. மேலும் 3 கடைகளை சேர்ந்த 10 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரூ பேருந்துகளில் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாகவும் இதுவரை வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x