Published : 06 Feb 2024 07:09 PM
Last Updated : 06 Feb 2024 07:09 PM

இண்டியா கூட்டணியை விட்டு பல கட்சிகள் வெளியேறியதாக சொல்வது உண்மை இல்லை: ராகுல்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியை விட்டு பல்வேறு கட்சிகள் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மம்தா பானர்ஜியின் அறிக்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், அவர் இண்டியா கூட்டணிக்கு மிக முக்கியமானவராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இண்டியா கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், பாஜக அணிக்குச் சென்றுவிட்டார் என்பது உண்மைதான். அவர் ஏன் அங்கு சென்றார் என்பதை நீங்களும்கூட யூகிக்க முடியும். அவர் எங்களோடு இல்லை என்றாலும், பிஹாரில் இண்டியா கூட்டணி போட்டியிடும். நிதிஷ் குமார் வெளியேறியதை வைத்து இண்டியா கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள், தற்போது கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க தான் முன்வந்ததாகவும், ஆனால் அதனை ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டதாகவும் மம்தா தெரிவித்தார். எனவே, அந்த கட்சியோடு கூட்டணி இல்லை என்றும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்தே பாஜகவை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், இண்டியா கூட்டணியைவிட்டு நிதிஷ் குமார் வெளியேறியதை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, மம்தா பானர்ஜி இன்னமும் இண்டியா கூட்டணியில்தான் இருக்கிறார் என ஒரு கருத்து நிலவி வருகிறது. அதோடு, அவர் இறங்கி வந்து காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், சிபிஎம் கட்சியோடு கூட்டணி வைக்க மம்தா பானர்ஜி தயாராக இல்லை என்பதால், அந்த விவகாரத்தை எவ்வாறு கையாளுவது என்ற அடுத்த சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிஹாரில் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளதால் இந்த மாநிலத்தில் இண்டியா கூட்டணிக்கு கணிசமான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். எனவே, பஞ்சாபில் இண்டியா கூட்டணியின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. எனினும், இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது. அங்கு அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x