Published : 24 Feb 2018 07:38 AM
Last Updated : 24 Feb 2018 07:38 AM
கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு லாலு தாக்கல் செய்த மனு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அபரேஷ் குமார் சிங், லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். நீதிபதி தனது தீர்ப்பில், “ஊழல் நடந்தபோது, பிஹார் முதல்வர் மற்றும் நிதி அமைச்சராக லாலு பதவி வகித்துள்ளார். ஊழல் தொடர்பான கோப்புகள் பொது கணக்கு குழுவிடம் பல ஆண்டுகள் இருந்தன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லாலுவை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தவிர மேலும் 2 வழக்குகளை லாலு எதிர்கொண்டு வருகிறார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT