Published : 05 Feb 2024 06:37 AM
Last Updated : 05 Feb 2024 06:37 AM

அரசு திட்டத்தின் கீழ் ரூ.51,000 பணம் பெறுவதற்காக உ.பி.யில் 568 ஜோடிக்கு நடைபெற்ற திருமணத்தில் மோசடி

பாலியா: உத்தர பிரதேசத்தின் பாலியாமாவட்டத்தில் 568 ஜோடிகளுக்கு நடைபெற்ற கூட்டு திருமணத்தில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஏழைகளுக்கு அரசு செலவில் கூட்டுதிருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூட்டு திருமணத்தில் பங்கேற்கும் ஜோடிகளுக்கு ரூ.51,000 நிதி அளிக்கப்படுகிறது. இதில் மணப் பெண்ணுக்கு ரூ.35,000, திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க ரூ.10,000, திருமண நிகழ்ச்சிக்கு ரூ.6,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உத்தர பிரதேசம் பாலியா மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ம்தேதி நடைபெற்ற திருமணத்தில் 568 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏகேத்கி சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனால், திருமணத்தில் பல மோசடிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆண்கள், பெண்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை பணம் கொடுத்து மணமகன், மணமகளாக அழைத்து வரப்பட்டனர் என பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் பதக் என்பவர் கூறியுள்ளார்.

ராஜ்குமார் என்ற 19 வயது இளைஞர் அளித்த பேட்டியில், ‘‘திருமணத்தை பார்வையிடுவதற்காக நான் சென்றேன். என்னை அழைத்து மணமகனாக உட்கார வைத்தனர். அதற்கு பணம்கொடுத்தனர்’’ என்றார். சில பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அவர்கள் கூட்டத்தில் ஒன்றாக நின்று தாங்களாகவே மாலையிட்டுக் கொண்டனர். மாப்பிள்ளையாக கலந்து கொண்ட சிலர் தங்கள் முகத்தை மறைத்தபடி உடையணிந்திருந்தனர். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

இந்த திருமணத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ கேத்கி சிங் கூறுகையில், ‘‘ திருமணம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான், எனக்கு தகவல் தெரிவித்தனர். இதில் ஏதோ மோசடி நடைபெறுவதாக நான் சந்தேகித்தேன். இதுகுறித்து தற்போது முழு விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இந்த மோசடி திருமணம் குறித்து உ.பி.அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘பயனாளிகளின் வங்கிகணக்கில் பணம் செலுத்தப்படுவதற்கு முன்பாகவே, இந்த ஊழல் கண்டறிப்பட்டுள்ளது. நாங்கள் உடனடியாக 3 பேர் குழு அமைத்து, பயனாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடியும் வரை, இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு எந்த பணமும் வழங்கப்படாது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x