Published : 02 Feb 2024 03:56 PM
Last Updated : 02 Feb 2024 03:56 PM

ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த புதன் கிழமை அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை நிறுத்திவைத்தார். இதையடுத்து, ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள ஹாட்வார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஹேமந்த் சோரன் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நேற்று (பிப்.1) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகினர். தங்கள் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த மனுவை வெள்ளிக்கிழமை (பிப்.2) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, “நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. எனவே உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்" என்று குறிப்பிட்டனர். பதிலுக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் உள்ளன என்று கபில் சிபல் வாதிட்டார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் “ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

பின்னணி: சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்றுமுன்தினம் (ஜன.31) பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நேற்றுமுன்தினம் (ஜன.31) இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x