Published : 28 Jan 2024 01:01 PM
Last Updated : 28 Jan 2024 01:01 PM

“சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை” - கேரள ஆளுநர் மீது முதல்வர் பினராயி விஜயன் சாடல்

பினராய் விஜயன் | கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் சனிக்கிழமை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அம்மாநில ஆளுநர் ஆரிப் கானை கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், "சட்டத்தைவிட மேலானவர்கள் யாரும் இல்லை" என்று சாடியுள்ளார்.

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்லம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிபிஎம் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யச் சொல்லி காவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்த டீ கடை ஒன்றில் இருந்த நாற்காலியை கொண்டு வந்து, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

ஆளுநரின் இந்தச் செயலை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,"கேரளாவில் சிஆர்பிஎஃப் நேரடியாக ஆட்சி செய்திடுமா? அவர்களால் ஒரு வழக்கினை பதிவு செய்திட முடியுமா? மாநிலத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்களை அனுப்புவது விசித்திரமாக இருக்கிறது. காவல்துறையினர் அவர் விரும்பிய வகையில் செயல்படவில்லை என்று ஆளுநர் புகார் கூறியுள்ளார். சிஆர்பிஎஃப் போலீஸார் அவர் விருப்பப்படி நடந்து கொள்வார்களா? சட்டத்தைவிட மேலானவர்கள் யாரும் இல்லை.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக இம்மாதிரியான போராட்டங்கள் நடக்கும், அதற்கு எதிர்வினையாற்றும் போது ஒரு வரைமுறையைக் கடைபிடிக்க வேண்டும். முதல்வருக்கு எதிரான போராட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று ஆளுநர் கேட்டுள்ளார். நான் பல பயணங்களை மேற்கொண்டுள்ளேன். அதற்கு முன்பாக நான் பயணிப்பதற்கு அந்தப் பாதை பாதுகாப்பாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வேன்.

அவர் நடந்து கொண்டது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது இல்லையா? ஒரு போராட்டம் நடக்கும் போது பயணிக்க அந்தப்பாதை பாதுகாப்பானது தானா என்பதை போலீஸார் உறுதி செய்வார்கள் என்பது ஆளுநருக்கு தெரியும். போராட்டக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள யாராவது தங்களின் வாகனத்தை விட்டு இறங்குவதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

கோழிக்கோட்டில் போலீஸார் தன்னுடன் வரவேண்டாம் என்று அவர் கூறினார். மாநிலத்தின் தலைவர் அவர், மிகவும் பாதுகாக்கப்பட்ட நபர், இதனை அவர் வேண்டாம் என்று கூறுகிறாரா? முன்பு ஒருமுறை கேரள போலீஸார் தான் சிறந்தவர்கள் என்று ஆளுநர் கூறினார். அவர்கள் அவருக்கு போதாதா? கேரளாவிலோ, இந்தியாவிலோ உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து பார்த்துண்டா?

சட்டமன்றத்தில் கொள்கை விளக்க உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசிக்க வேண்டும் என்ற ஆளுநரின் முடிவு அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல். கொள்கை விளக்க உரையை வாசிக்க ஆளுநருக்கு நேரமில்லை ஆனால், சாலையில் அமர்ந்து 1.30 மணிநேரம் போராட்டம் நடத்த அவருக்கு நேரம் இருக்கிறது" இவ்வாறு முதல்வர் விமர்சித்துள்ளார்.

சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ (SFI) உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x