Published : 18 Jan 2024 04:49 AM
Last Updated : 18 Jan 2024 04:49 AM

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதில், மக்கள் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவாகும்போது அதை காப்பீடு திட்டம் மூலம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, காப்பீடு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு முதல் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கி, 100 கோடியாக உயர்த்தவும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கிசான் சம்மான் நிதி பெறுபவர்கள், கட்டிட தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கம் அல்லாத மற்ற சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறையலாம்: இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் முதல் மற்றும் 2-வது காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்டின. 2-வது காலாண்டு வரை அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபம் ரூ.57,091.87 கோடி. இது 2022-23-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தைவிட 4,917 சதவீதம் அதிகம். அதனால் மக்களவை தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சம்பளதாரர்களுக்கான நிரந்தர கழிவில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது இந்த ஆண்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரிமுறைக்கு இணையாக, பழைய வரிமுறையில், வருமான வரி விலக்கு ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x