Published : 03 Jan 2024 02:32 PM
Last Updated : 03 Jan 2024 02:32 PM

சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவுக்கு முக்கிய இடம்: பிரதமர் மோடி உறுதி

லட்சத்தீவில் பிரதமர் மோடி

கவரட்டி(லட்சத்தீவு): நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்தியில் ஆட்சி செய்தவர்கள் தங்கள் கட்சி வளர்ச்சிக்கே முன்னுரிமை கொடுத்தார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேலும், சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவுக்கு பிரதான இடம் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை ஆகியவற்றை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடு சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்கள் கட்சியை வளர்ப்பதற்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்கள். தொலைதூரத்தில் இருந்த மாநிலங்கள், எல்லைப் பகுதிகள், கடலுக்கு மத்தியில் அமைந்த தீவுகள் ஆகியவற்றுக்கு அவர்கள் எந்த கவனத்தையும் கொடுக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக நமது அரசு, தொலைதூர மாநிலங்கள், எல்லைப் பகுதிகள், தீவுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இன்று கோடிக்கணக்கான மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம். இதை கருத்தில் கொண்டே இன்று ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. லட்சத்தீவில் இணையதள சேவை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், குழந்தைகள் கவனிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கடந்த 2020-ல் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். அடுத்த 1000 நாட்களில், அதிவேக இணைய சேவை லட்சத்தீவுக்கு வழங்கப்படும் என்பதே அந்த வாக்குறுதி. இன்று அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கொச்சி - லட்சத்தீவு நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணைய சேவையை வழங்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நாட்டின் லட்சியத்தை நிறைவேற்றுவதில் லட்சத்தீவு மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவுக்கு பிரதான இடம் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜி20 கூட்டத்தை நடத்தியதன் மூலம் லட்சத்தீவு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது" என தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய அரசின் திட்டங்களால் லட்சத்தீவில் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவகம் தொடங்குவதற்கு தங்கள் சுய உதவிக்குழு எவ்வாறு உதவியது என்பது குறித்தும் அதன்மூலம் தாங்கள் எவ்வாறு தற்சார்பு அடைந்தோம் என்பது குறித்தும் பெண்கள் சிலர் தெரிவித்தனர்.

இதய நோய் சிகிச்சைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் உதவியது குறித்து வயதான நபர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். PM-KISAN காரணமாக ஒரு பெண் விவசாயியின் வாழ்க்கை மாறியுள்ளது. மற்றவர்கள் இலவச ரேஷன் பொருட்கள், மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைத்த உதவிகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாய கடன் அட்டை, இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் தாங்கள் எவ்வாறு பயன் அடைந்தோம் என்பது குறித்து தெரிவித்தார்கள். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொலைதூரத்தில் வாழும் மக்களையும் சென்று சேர்ந்திருப்பதை அறிந்தபோது ஆழமான திருப்தி ஏற்பட்டது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இதையடுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "லட்சத்தீவின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்தேன்.

உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் மக்களுக்குச் செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் லட்சத்தீவு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அமைத்துத் தருவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x