Published : 30 Dec 2023 06:59 PM
Last Updated : 30 Dec 2023 06:59 PM

“அயோத்தி செல்ல அழைப்பு தேவையில்லை” - ராமர் கோயில் திறப்பு விழா குறித்து உத்தவ் தாக்கரே கருத்து

உத்தவ் தாக்கரே | கோப்புப் படம்

மும்பை: அயோத்தி செல்வதற்கு அழைப்பு தேவையில்லை என்று சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வந்துள்ளதா, அதில் பங்கேற்பீர்களா என உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அயோத்தி செல்வதற்கு அழைப்பு தேவையில்லை.

குழந்தை ராமர் அனைவருக்குமானவர். அவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. ராம பக்தி என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. எப்போதெல்லாம் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் செல்கிறேன்.

மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோதும் நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்காக சிவ சேனா மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. ராமர் கோயில் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஒரு இடைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையே எனது தந்தை பால் தாக்கரே இழந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம். மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை" என தெரிவித்தார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (UBT) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், "1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள். பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது" என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x