Published : 21 Jan 2018 08:25 AM
Last Updated : 21 Jan 2018 08:25 AM
கோவாவில் டாக்ஸி டிரைவர்கள் நேற்று 2-வது வேலைநிறுத்தம் மேற்கொண்ட நிலையில், போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உபேர், ஓலா போன்ற முன்னணி டாக்ஸி நிறுவனங்களை வரவழைப்போம் என்று அவர்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவாவில் சுற்றுலா டாக்ஸிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்தும் போலீஸார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் கெடுபிடியை கண்டித்தும் வடக்கு மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் சுற்றுலா டாக்ஸி சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பனாஜியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் அரசுத் தரப்பில் அவர்களுக்கு எந்த உறுதியும் அளிக்கப்படாததால் நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் மாநில போக்குவரத்து அமைச்சர் சுதின் தவலிகர் நேற்று கூறும்போது, “டாக்ஸி சங்கங்களின் போராட்டம் சட்டவிரோதம். போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உபேர், ஓலா போன்ற முன்னணி டாக்ஸி நிறுவனங்களை இங்கு வரவழைப்போம். அவ்வாறு அழைக்கப்பட்டால் அதற்கு டாக்ஸி சங்க நிர்வாகிகள்தான் காரணமே தவிர நாங்கள் அல்ல” என்றார்.
கோவா அரசின் பல்வேறு துறைகள் தனியார் டாக்ஸி சேவையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் போராட் டம் காரணமாக பல டாக்ஸிகள் அரசுப் பணிக்கு வரவில்லை. இந்த டாக்ஸிக்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவு எடுக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் டாக்ஸி சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT