Published : 20 Dec 2023 06:02 AM
Last Updated : 20 Dec 2023 06:02 AM

‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆக கார்கே மறுப்பு

‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன் மொழிந்தார். ஆனால், இதற்கு கார்கே மறுப்பு தெரிவித்து விட்டார்.

இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இடைநீக்கத்துக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிகளவில் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இண்டியா கூட்டணி கூட்டத்தில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்பிரச்சினையை இனி எப்படி கையாள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் வேட்பாளர்: மக்களவை தேர்தல் முடிவுக்குப்பின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, இண்டியாகூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி நேற்றைய கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார். காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் மல்லிகார்ஜூன கார்கே முக்கியமான தலித் தலைவர் என்பதால், இந்த திட்டத்துக்கு இண்டியா கூட்டணியில் உள்ள 12 தலைவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தனர்.

இது சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, இத்திட்டத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். ‘‘நான் கீழ்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன் என்றும், இண்டியா கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை’’ என கார்கே கூறிவிட்டார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல்பெயரை அறிவிக்க, இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்பது நேற்றைய கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகள் மூலம் தெளிவாகியுள்ளது.

தொகுதி பங்கீடு: இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்கள் 4 பேர் கொண்ட தேசியகூட்டணிகுழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த குழுவுக்கு மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். முன்னாள் முதல்வர்கள் அசோக்கெலாட், பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் முகுல் வாஷ்னிக் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்ததாக அதன்பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார். இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்குவதற்கு முன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த மல்லிகார்ஜூன கார்கே, ‘‘தொகுதி பங்கீடு குறித்து மாநில அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் பிரச்சினை ஏற்பட்டால், அது குறித்து மத்தியில் பேசி முடிவெடுக்கப்படும்.

விழிப்புணர்வு: இண்டியா கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்கள் நாட்டின் பல நகரங்களில் நடத்தப்படும் என்றும், அப்போதுதான் இண்டியா கூட்டணி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்’’ என கூறினார். இந்த மாதம் 31-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கெடு விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x