Published : 17 Dec 2023 03:16 PM
Last Updated : 17 Dec 2023 03:16 PM

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

மல்லிகார்ஜுன கார்கே | கோப்புப்படம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிகளுக்குள் இணக்கம் ஏற்படவில்லை. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள காங்கிரஸ் உடன்படவில்லை. இது காங்கிரஸின் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தட்டிப்பறிக்கவும், சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கவும் விரும்பியதால் அங்கு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

ராஜஸ்தானைப் பொறுத்த வரை அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வழக்கம் இருந்தாலும், அசோக் கெலாட் அரசின் நலத்திட்டங்கள் இந்த வழக்கத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் கட்சி நம்பியது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் (அமைப்பு) செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கட்சியின் மோசமான தேர்தல் செயல்பாடுகள் குறித்து மட்டும் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக ஜிது பட்வாரியையும், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சரண் தாஸ் மஹந்த் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை நியமித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x