Published : 15 Dec 2023 01:43 PM
Last Updated : 15 Dec 2023 01:43 PM

பன்னுன் கொலைச் சதி: கைதான இந்தியர் நிகில் குப்தா மனு தாக்கல் @ உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்லச் சதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிகில் குப்தா, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் நடவடிக்கையில் இந்தியா தலையிட வேண்டும் என்று தனது குடும்பத்தினர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் தீவிரவாதியும், ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒரு ஆளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், நிகிலால் அமர்த்தப்பட்ட நபர், அமெரிக்க மத்திய அமைப்பின் முகவராக மாறினார். இதனைத் தொடர்ந்து செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார். கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில், செக் குடியரசு சிறையில் இருந்து தன்னை விடுவிக்கவும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையிலும் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தனது குடும்பத்தினர் மூலமாக நிகில் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மனுவில் தான் பராக் சிறையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகனான தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சுவதாகவும் நிகில் குப்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிகில் மீதான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், "நிகில் குப்தாவும் சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசு அதிகாரியும் மே மாதம் முதல் தொலைப்பேசி வழியாகவும், மின்னணு தொடர்பு மூலமாகவும் பல முறை தகவல்கள் பரிமாறியுள்ளனர். அப்போது சிசி1 கொலைக்கு திட்டமிடுமாறு நிகில் குப்தாவிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலாக குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிசி1-ன் உத்தரவின் படி, குற்றச்செயல்களில் தொடர்பு என தான் நம்பிய ஒருவரை பன்னுனைக் கொலைச் செய்வதற்காக நிகில் குப்தா அமர்த்தியுள்ளார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்டவர் அமெரிக்காவின் போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய தகவலாளி” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ''அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்தவரையில், குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது'' என தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x