Published : 13 Dec 2023 03:15 PM
Last Updated : 13 Dec 2023 03:15 PM

எம்.பி பதவி பறிப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு

மஹுவா மொய்த்ரா

புதுடெல்லி: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எம்.பி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா கோரிக்கை இன்று விடுத்துள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய மனுவை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரிக்க இன்று (டிசம்பர் 13) அல்லது நாளை (டிசம்பர்-14) ஆகிய தேதிகளில் பட்டியலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, இந்த விஷயம் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். அதனால், மின்னஞ்சல் மூலமாக உடனடியாக முறையீடு செய்யுமாறும், தான் அதுகுறித்து உடனடியாக முடிவெடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தரப்புக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, மஹுவா மொய்த்ராவில் மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னணி என்ன? - கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராகமொய்த்ரா கேள்விகளை எழுப்பினார். இருவர் குறித்தும் மக்களவையில் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

நெறிமுறைகள் குழு: இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் விஜய் சோன்கர் 500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, திரிணமூல் எம்பிக்கள் பேசும்போது, “500 பக்க அறிக்கையை சில மணி நேரங்களில் படிக்க முடியாது. 3 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரினர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார். இதற்கு அவைத் தலைவர் பதிலளித்தபோது, "நெறிமுறைகள் குழுவின் விசாரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவுசெய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை" என்று தெரிவித்தார்.

மொய்த்ரா பதவி பறிப்பு: சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மொய்த்ரா நிருபர்களிடம் கூறும்போது, “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. நெறிமுறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக அறிக்கை அளித்துள்ளது" என்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x