Published : 12 Dec 2023 05:55 AM
Last Updated : 12 Dec 2023 05:55 AM

ஒரே ஒரு நபரால் இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது தாமதமானது: அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி: ஒரே ஒரு நபரால் இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது தாமதமானது என்று முன்னாள் பிரதமர் நேருவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு- காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால்(நேரு) தாமதமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீரில்திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது.

370-வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன்அடைந்து வந்தன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டன. கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் கையில் நாங்கள்லேப்டாப்களை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

370-வது பிரிவை ரத்து செய்யும்முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, பிரதமர் மோடி 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான தொலைநோக்கு முடிவை எடுத்தார். இந்த பிரிவைரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பியுள்ளது.

ஒரு காலத்தில் வன்முறையால் சிதைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதுமனித வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் செழிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் வசிப்பவர்களின் வருமானம் உயர்ந்துள்ளது. 370-வது பிரிவை ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது.

370-வது பிரிவை ரத்து செய்தபிறகு ஏழைகள் மற்றும் உரிமைமறுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு உள்ளன.பிரிவினைவாதம், கல்வீச்சு ஆகியவை கடந்த கால விஷயங்கள் ஆகிவிட்டன. இப்பகுதி முழுவதும் இப்போது இனிமையான இசை மற்றும் கலாச்சார சுற்றுலா நிகழ்வுகள் எதிரொலிக்கின்றன. ஒற்றுமையின் பிணைப்புகள் வலுவடைந்துள்ளன.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்ஆகியவை எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானவை. பிரதமர்மோடி தலைமையின் கீழ், ஜம்முகாஷ்மீர், லடாக்கில் நீடித்த அமைதியை நிறுவுவதற்கும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்அரசு உறுதிபூண்டுள்ளது. புதியசலுகைகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது, அதிநவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்திற்காக முழுசக்தியையும் அரசு தொடர்ந்து பயன்படுத்தும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x