Last Updated : 23 Jan, 2018 09:56 AM

 

Published : 23 Jan 2018 09:56 AM
Last Updated : 23 Jan 2018 09:56 AM

ஜனவரி 26-ல் அரசியல் சாசனப் பாதுகாப்பு ஊர்வலம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறார் சரத்பவார்

அரசியல் சாசனப் பாதுகாப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இறங்கியுள்ளார். இதையொட்டி மும்பையில் வரும் ஜனவரி 26-ம் தேதி மவுன ஊர்வலம் நடைபெற உள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் 10 ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேசமயம் மும்பையில் ‘ஸ்வாபிமானி சேத்காரி சங்தானா (எஸ்எஸ்எஸ்)’ என்ற விவசாயிகள் நல அமைப்பு, அரசியல் சாசனப் பாதுகாப்பை வலியுறுத்தி மவுன ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மக்களவையில் ‘ஸ்வாபிமானி பக்சா’ என்ற கட்சியின் ஒரே உறுப்பினரான ராஜு சேத்தி, இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் நடத்தும் ஊர்வலத்தில் அரசியல், சமூகம் மற்றும் பொதுநலம் சார்ந்த நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக இந்த ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தனது கட்சித் தலைவர்களை அனுப்பி வந்த சரத்பவார் இம்முறை தாமே கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி பிரசாத், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சரத் யாதவ் உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சார்பில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கலந்து கொள்கிறார். குஜராத் சமூக அமைப்புகளின் இளம் தலைவர்களான ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகியோரும் பங்கேற்க சம்மதித்துள்ளனர். எனினும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “இந்திய அரசியல் சாசனத்தை பாஜக தனது இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக மாற்றி அமைப்பதில் இறங்கியுள்ளது. இதற்கு எதிரான இந்த ஊர்வலத்திற்கு ஐஐடி மாணவர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர். அடுத்த ஆண்டு, மக்களவை மற்றும் மகராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகவும் இந்த ஊர்வலம் இருக்கும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x