Published : 03 Dec 2023 08:17 AM
Last Updated : 03 Dec 2023 08:17 AM

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதன்படி, சத்தீஸ்கரில் நவ.7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவ.7, மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.25, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தெலங்கானாவில் பலப்பரீட்சை: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா ? அல்லது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றி முதன் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்குமா? அல்லது, யாருக்குமே மெஜாரிட்டி வராமல் தொங்கு சட்டப்பேரவை அமையுமா? பாஜகவின் நிலை என்ன? எனும் பல்வேறு கேள்விகளுக்கு இன்று மதியத்திற்குள் பதில் கிடைத்து விடும்.

மத்தியப் பிரதேசத்தை தக்கவைக்குமா பாஜக? மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இங்கு ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. இங்கு இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் சில மீண்டும் பாஜக ஆட்சி எனக் குறிப்பிட்டனர். இன்னும் சில, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன. இதன் காரணமாக, கடும் போட்டியுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ள வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வலை வீசியுள்ளதாகத் தெரிகிறது.

ராஜஸ்தான் யாருக்கு? ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. எஞ்சிய 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது. கருத்துக் கணிப்புகள் சில ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் சில பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளன.

சத்தீஸ்கரும் காங்., நம்பிக்கையும்.. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவ.17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது.

ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x