Published : 30 Nov 2023 07:17 PM
Last Updated : 30 Nov 2023 07:17 PM

Exit Polls Result 2023: சத்தீஸ்கர், தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ்; ராஜஸ்தான், ம.பி.யில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் முந்துகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு மிகுதியாக உள்ளது. மிசோரமில் இழுபறி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையேதான் இம்மாநிலத்தில் பிரதான போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை அளித்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் முதல் 123 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 102 முதல் 125 வரை கைப்பற்றும் என்றும் தெரிய வந்துள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் 118 முதல் 130 வரை பாஜக வெற்றி பெறும் என்றும், 97 முதல் 107 வரை காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்துள்ளது. பாஜக 106-116 தொகுதிகளிலும், காங்கிரஸ் 111-121 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டிவி9 தெரிவித்துள்ளது. 95-115 தொகுதிகளில் பாஜகவும், 105-120 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெறும் என்று டைனிக் பாஸ்கர் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 200. தேர்தல் நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை 199. ஆட்சி அமைக்க வெற்றி பெறத் தேவையான எண்ணிக்கை 100. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, இங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியை அளித்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில், ராஜஸ்தானில் பாஜக 98-105 தொகுதிகளிலும், காங்கிரஸ் 85-95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. இண்டியா டுடே-ஆக்ஸிஸ் மை இண்டியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 80-100 தொகுதிகளிலும், காங்கிரஸ் 86-106 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத் கருத்துக் கணப்பின்படி, பாஜக 100-122 இடங்களிலும், காங்கிரஸ் 62-85 இடங்களிலும் வெற்றி பெறும். பி-மார்க் கருத்துக் கணிப்பின்படி பாஜக 105-125 இடங்களிலும், காங்கிரஸ் 69-91 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கரில் பாஜக 30-40 இடங்களிலும், காங்கிரஸ் 46-56 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி பாஜக 34-45 இடங்களிலும், காங்கிரஸ் 42-53 இடங்களிலும் வெற்றி பெறும். நியூஸ் 24-டுடேஸ் சாணக்கியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி - மேட்ரிஸ் கருத்துக் கணிப்பில் பாஜக 34-42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44-52 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் இழுபறி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா: தெலங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி(பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக இடையே மும்னைப் போட்டி நிலவியது. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதை தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 63-79 தொகுதிகளிலும், பிஆர்எஸ் 31-47 தொகுதிகளிலும், பாஜக 2-4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 48-64 தொகுதிகளிலும், பிஆர்எஸ் 40-55 தொகுதிகளிலும், பாஜக 7-13 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 58-68, பிஆர்எஸ் 46-56, பாஜக 4-9 தொகுதிகளில் வெற்றி பெறும் என ரிபப்ளிக் டிவி - மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. டிவி9 பாரத்வர்ஷ் - போல்ஸ்டார்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 49-59, பிஆர்எஸ் 48-58, பாஜக 5-10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.

மிசோரம்: 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரத்தில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: டைம்ஸ் நவ்-இடிஜி நடத்திய கருத்துக் கணிப்பில் மிசோ தேசிய முன்னணி(MNF) 14-18 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 10-14 இடங்களிலும், காங்கிரஸ் 9-13 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி நியூஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில், MNF 15-21 இடங்களிலும், ZPM 12-18 இடங்களிலும், காங்கிரஸ் 2-8 இடங்களிலும், பாஜக 0 இடத்திலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் MNF 10-14 தொகுதிகளிலும், ZPM 15-25 தொகுதிகளிலும், காங்கிரஸ் அதிகபட்சம் 9 தொகுதிகளிலும், பாஜக அதிகபட்சம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x