Published : 03 Jan 2018 04:47 PM
Last Updated : 03 Jan 2018 04:47 PM
முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று (புதன்) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமளி காரணமாக அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
முத்தலாக் வழக்கத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் தடை சட்ட மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ், அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று (புதன்) மாலை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. முத்தலாக் மசோதாவிற்கு எதிராக எதிர்ட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.
ஆனால், அந்த மசோதாவை தற்போதுள்ள நிலையிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஆளும் கட்சி உறுதியாக இருந்தது. அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆளும் கட்சி எம்.பிக்களும் கோஷம் எழுப்பினார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மகாராஷ்டிர கலவரம் தொடர்பாக எதிர்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகலிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT