Published : 26 Nov 2023 05:38 AM
Last Updated : 26 Nov 2023 05:38 AM

ஆதித்யா விண்கலம் ஜனவரி 7-ம் தேதி எல்-1 சுற்றுப்பாதையில் நுழையும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை: ஆதித்யா விண்கலம் சூரியனின் எல்-1 சுற்றுப்பாதைப் பகுதியில் ஜனவரி 7-ம் தேதி நுழையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம்ஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிவிண்கலம் சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டுமையத்தில் இருந்தவாறு விண்கலத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் ஆதித்யா விண்கலமானது சூரியனின் எல்-1 பகுதியில் வரும் ஜனவரி 7-ம் தேதிநுழையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ளசூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய தனது பயணத்தின் இறுதிகட்டத்தில் ஆதித்யா விண்கலம் உள்ளது. தற்போதைய சூழல்களின்படி எல்-1 சுற்றுப்பாதையில் விண்கலம் ஜனவரி 7-ம் தேதி நுழையும்.அதன்பின் ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இதுதவிர மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின்அடுத்தகட்ட சோதனை ஒட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும். இதில் மனித வடிவிலான ரோபோவும் அனுப்பப்பட உள்ளது.அதேபோல், முழுவதும் தனியார்தொழிற் நிறுவனங்கள் பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டுவரும் பிஎஸ்எல்வி ராக்கெட் 2024 அக்டோபரில் விண்ணில் ஏவப்படும்.

இதற்கிடையே ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சுற்றுப்பாதையில் வலம்வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x