Last Updated : 23 Nov, 2023 07:59 AM

 

Published : 23 Nov 2023 07:59 AM
Last Updated : 23 Nov 2023 07:59 AM

ஹரியாணாவில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டிய நில உரிமையாளர்கள் 29 பேர் கைது

புதுடெல்லி: ஹரியாணாவின் குருகிராமில் நில உரிமையாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதாக இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதான இந்த 29 பேர், ஹரியாணாவின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியவர்கள். இவர்களை போன்று, விதிமுறைகளை மீறி சொகுசு பங்களாக்களை கட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல் துறை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதற்காக, ஹரியாணா மாநில பாஜக அரசு அமலாக்கப் பிரிவை கடந்த ஜுலையில் அமைத்தது. அதன் சார்பில் குருகிராமில் 96 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் ஹரியாணாவின் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. இந்த நகரம் உருவாவதற்கு முன் இங்கு பயிர் செய்த விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று கோடீஸ்வரராகி விட்டனர்.

ஐ.டி. நிறுவனங்கள் காரணம்: இதற்கு அங்கு பல ஐ.டி பெருநிறுவனங்கள் அமைந்ததுதான் காரணம். பல நில உரிமையாளர்கள், ஹரியாணா அரசின் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டி விட்டனர். இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஹரியாணா மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஹரியாணா அரசின் நில அமலாக்க பிரிவின் ஆய்வாளரான அர்விந்த் தஹியா கூறும்போது, ‘‘கைதான 29 பேரில் 8 பேர் நில மாஃபியாக்கள். அவர்கள் தூண்டுதலினால் மற்றவர்களும்கட்டிட விதிகளை மீறிவருகின்றனர். அனைவர் மீதும் பாரபட்சம்இன்றி கைது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 3 வருடங்கள் வரைசிறை தண்டனையும் பெற்றுத் தரப்படும்.’’ என்றார்.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இதுபோல் விதிகளை மீறும் கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற பொதுவானக் கருத்து உண்டு. இதை மாற்றும் வகையில் ஹரியாணா அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x