Published : 16 Jan 2018 11:25 AM
Last Updated : 16 Jan 2018 11:25 AM

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு இன்னமும் தீரவில்லை: கே.கே. வேணுகோபால் தகவல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இன்னமும் தீர்க்கப்படவில்லை, ஒரிரு நாட்களில் இந்த பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதன்காரணமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பையும் சந்தித்துப் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய 4 மூத்த நீதிபதிகளும் திங்களன்று பணிக்குத் திரும்பினர்.

நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) காலை 10.15 மணி அளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் 4 மூத்த நீதிபதிகளும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் நீதிபதிகள் இடையேயான பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என உச்ச நீதிமன்ற அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர், "உச்ச நீதிமன்றம் நீதிபதிகளிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு இன்னமும் தீர்க்கப்படவில்லை. எனினும் ஒரிரு நாட்களுக்கும் முழுமையாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையோ அல்லது 4 அதிருப்தி நீதிபதிகளையோ நான் சந்திக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x