Published : 06 Jan 2018 12:47 PM
Last Updated : 06 Jan 2018 12:47 PM

லாலு மகள் மிசா பாரதி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் இன்று (சனிக்கிழமை) டெல்லி நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகிய இருவரும், 8 ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக புகார் எழுந்தது.

டெல்லியைச் சேர்ந்த சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திரா ஜெயின் என்ற இரு சகோதரர்கள் மற்றும் சிலர், போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்தது. இதில் ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்துடன் மிசா பாரதி தம்பதியரின் மிஷைல் பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மிசா பாரதி மற்றும் சைலேஷ் குமாருக்கு சொந்தமான 3 பண்ணை வீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தியது. அப்போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் மிசா பாரதி, சைலேஷ் குமார் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். அவரது சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில், மிசா பாரதி மற்றும் சைலேஷ் குமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. இந்த இரு குற்றப்பத்திரிக்கைகளையும் பிப்ரவரி 5ம் தேதி நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x