Published : 17 Nov 2023 01:45 PM
Last Updated : 17 Nov 2023 01:45 PM

“பாகிஸ்தானில் கொண்டாட்டம் நடக்கும்” - மத்தியப் பிரதேச பாஜக அமைச்சரின் பேச்சும் காங்கிரஸின் பதிலடியும்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலில் பாஜக தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் பாகிஸ்தானில் கொண்டாட்டம் நடக்கும் என்று அம்மாநில உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதற்கு, “உள்துறை அமைச்சர் விரக்தியில் பேசுகிறார்” என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநில உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான நரோட்டம் மிஸ்ரா, தாதியா தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் பேசிய அவர், "தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் போது அது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரும். இத்தேர்தலில் பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அது பாகிஸ்தானில் கொண்டாடப்படும். மத்தியப் பிரதேசத்தில் தாமரைச் சின்னத்துக்கு வாக்களிப்பது ராணுவம் எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வெற்றி பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தாமரை பொத்தான் தீவிரவாதிகளுக்கு ஒரு தடையாக பார்க்கப்பட்டு அவர்களுக்குள் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அவரின் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கமல்நாத் கூறுகையில், "நரோட்டாம் முதலில் வெற்றி பெறட்டும் அதன் பிறகு பாகிஸ்தானைப் பற்றி பேசட்டும். அவர்கள் எதையும் விட்டுவைக்காத காரணத்தினால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். விரக்தி அவர்களை இப்படி பேச வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 2.87 கோடி ஆண் வாக்காளர்கள், 2.71 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

42 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் பெண்களாலும், 183 வாக்குப்பதிவு மையங்கள் மாற்றுத் திறனாளிகளாலும் நடத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும் என்ற போதிலும், பாலாகட், மாண்ட்லா, திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில வாக்குப்பதிவு மையங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடித்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 27.79% வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x