Published : 08 Nov 2023 04:09 PM
Last Updated : 08 Nov 2023 04:09 PM

“அரசு நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் தந்துவிட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதே பாஜக கொள்கை” - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி | கோப்புப் படம்

போபால்: அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைநகர் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வத்ரா, "ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற பெரிய அரசு நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. இதன் பின்னணியில் ஜவஹர்லால் நேருவின் எண்ணம் இருந்தது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இதுபோன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால், அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது.

அரசு நடத்தும் நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர், தங்களின் பணி தனியார்மயமாகும் என்பதாலும், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பதாலும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று மோடி கூறுகிறார். மோடி படித்த பள்ளி காங்கிரஸால் கட்டப்பட்டது. அவர் கற்ற சமூக அறிவியல், அரசியல் அறிவியல் அனைத்தும் காங்கிரஸ் கொடுத்த கணினி மூலம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். எனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் கணினிகளை கொண்டு வர அவர் விரும்பினார். ஆனால், அதனை எதிர்த்தவர்கள் இவர்கள்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும், நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 200 யூனிட் வரையில் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். சிலிண்டர் விலை ரூ.500-க்கு வழங்கப்படும், ஓபிசி சமூகத்தவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அதோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டு லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான கட்டணம் விதிக்கப்படாது. 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்" என தெரிவித்தார். 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x