Published : 06 Nov 2023 05:14 PM
Last Updated : 06 Nov 2023 05:14 PM

“5 மாநிலத் தேர்தல்கள் ஓர் ஒத்திகை” - நிதிஷின் 'இண்டியா’ கவலை குறித்து உத்தவ் கட்சி கருத்து

சஞ்சய் ரவுத் | கோப்புப்படம்

மும்பை: 'இண்டியா' கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை மறுத்துள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி), ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் அணி சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத், "தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு முக்கியமான கட்சியாகும். இந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்காமல் மக்களவைத் தேர்தலுக்கு எப்படி தயாராக முடியும்? ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகு 'இண்டியா' கூட்டணியின் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார். 'இண்டியா' கூட்டணி குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்திருந்த நிலையில், சஞ்சய் ரவுத் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், ‘பிஹார் முதல்வரின் கவலை நியாயமானது தான். ஆனால், அதை அவர் பொதுவெளியில் கூறியிருக்க வேண்டாம். அது பாஜகவை குதூகலப்படுத்தும். அதேநேரத்தில் இந்த மாதம் நடக்க இருக்கிற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அடுத்த ஆண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான ஒத்திகையே. அதிகாரம் தவறாக பயன்படுத்துவது பணத்தின் மூலம் நிகழ்த்தப்படும் ஆணவத்தினை தடுக்கவும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் வெற்றிகள் மிகவும் இன்றியமையாதது. 'இண்டியா' கூட்டணிக்கும் மிகவும் முக்கியமானது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 2-ம் தேதி பாட்னாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியப் பேரணியில் உரையாற்றிய 'இண்டியா' கூட்டணியின் முக்கிய முகமாகக் கருதப்படுபவரான நிதிஷ் குமார், “ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் ஆர்வம் செலுத்தி வருவதன் காரணமாக சமீப காலமாக 'இண்டியா' கூட்டணியின் செயல்பாடு வேகம் பெறாமல் தொய்வடைந்து போயுள்ளது.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டை காக்கவே 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டது. அதற்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த பேரணியை இங்கு நடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குமுக்கிய பங்களிப்பை வழங்க கூட்டணிக் கட்சியினர் ஒப்புக்கொண்ட போதிலும் அந்த கட்சி 5 மாநில தேர்தல்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால்தான் இண்டியா கூட்டணியின் வேகம் தடைபட்டுள்ளது” என்று பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நவ.4-ம் தேதி இதுகுறித்து பிஹார் முதல்வரை சமாதானப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமாரை தொலைப்பேசியில் அழைத்துப்பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சிக்கு 'இண்டியா' கூட்டணி மிகவும் முக்கியம். காங்கிரஸ் தற்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கவனம் செலுத்துகிறது. மாநிலத் தேர்தல் முடிந்ததும் 'இண்டியா' கூட்டணி கொள்கைகள் மற்றும் கூட்டுப் பேரணிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தும்” என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x