Published : 04 Nov 2023 03:49 PM
Last Updated : 04 Nov 2023 03:49 PM

‘காங்கிரஸுக்கு இண்டியா கூட்டணி முக்கியம்’ - நிதிஷ் குமாரை சமாதானப்படுத்திய கார்கே

நிதிஷ் உடன் கார்கே | கோப்புப்படம்

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சிக்கு 'இண்டியா' கூட்டணி மிகவும் முக்கியம்” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரிடம், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைப்பேசியில் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சிக்கு 'இண்டியா' கூட்டணி மிகவும் முக்கியம். காங்கிரஸ் தற்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கவனம் செலுத்துகிறது. மாநிலத் தேர்தல் முடிந்ததும் 'இண்டியா' கூட்டணி கொள்கைகள் மற்றும் கூட்டுப் பேரணிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நவம்பர் 2-ம் தேதி காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். பாட்னாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியப் பேரணியில் உரையாற்றிய இண்டியா கூட்டணியின் முக்கிய முகமாகக் கருதப்படுபவரான நிதிஷ் குமார், “ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் ஆர்வம் செலுத்தி வருவதன் காரணமாக சமீப காலமாக இண்டியா கூட்டணியின் செயல்பாடு வேகம் பெறாமல் தொய்வடைந்து போயுள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டை காக்கவே இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதற்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த பேரணியை இங்கு நடத்துகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்குமுக்கிய பங்களிப்பை வழங்க கூட்டணிக் கட்சியினர் ஒப்புக்கொண்ட போதிலும் அந்த கட்சி 5 மாநில தேர்தல்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால்தான் இண்டியா கூட்டணியின் வேகம் தடைபட்டுள்ளது. எனவே, தேர்தலுக்கு பிறகே இண்டியா கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று நிதிஷ் குமார் பேசியிருந்தார்.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக்கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முக்கிய பங்காற்றினார். கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

அடுத்த கூட்டமும் பேரணியும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிரெதிர் அணிகளில் மோதுகின்றன. இதனால் 'இண்டியா' கூட்டணி பலவீனமடைந்து வருவதாக குற்றம்சாட்டுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு 'இண்டியா' கூட்டணி மிகவும் முக்கியம்” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவரை சமாதானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x