Last Updated : 04 Jan, 2018 09:55 AM

 

Published : 04 Jan 2018 09:55 AM
Last Updated : 04 Jan 2018 09:55 AM

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இமாச்சல பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை ரஜ்னீஷ் (எ) விக்கி என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இதன்மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹமீர்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஜ்னீஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.20,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.30,000 நஷ்ட ஈட்டு தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாச்சல பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் நஷ்டஈடு வழங்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கு மட்டுமே மாநில அரசு திட்டத்தில் இடமுண்டு. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.சலமேஸ்வர், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பாவிட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி என்பதையும் அவர் ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதையும் மனதில் கொண்டு உத்தரவை மாற்றியமைக்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இமாச்சல பிரதேச அரசு ரூ.15 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வைப்பு நிதியாக செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவரது பெற்றோரிடம் வழங்க வேண்டும். அந்த வட்டித் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனுக்காக செலவழிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x