Published : 23 Jan 2018 11:57 AM
Last Updated : 23 Jan 2018 11:57 AM
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது. "எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிகள் குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவித்தன.
இந்த புகார் கடிதம், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. 21 எம்எல்ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணை மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதை ஏற்று அவர்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பதவி நீக்க உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் தங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன் உரிய முறையில் சட்ட விதிகள் பரிசீலிக்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை, எனவே பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT