Published : 01 Nov 2023 01:44 PM
Last Updated : 01 Nov 2023 01:44 PM

''கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது'' - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி

புதுடெல்லி: நமது உள்நாட்டு வர்த்தகம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 3 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர். அகௌரா - அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு, குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு - II ஆகிய மூன்று திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 6.78 கி.மீ இரட்டை ரயில் பாதை மற்றும் திரிபுராவில் 5.46 கி.மீ இரட்டை ரயில் பாதையுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் இணைப்பின் மொத்த நீளம் 12.24 கி.மீ ஆகும்.

குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதைத் திட்டம் இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.

1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதி திட்டத்தின் கீழ் மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையம் ஆகும். இந்தியாவின் என்.டி.பி.சி லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம்-இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. 2 வது அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று திட்டங்களையும் தொடங்கிவைத்த பிறகு பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, "இந்தியா - வங்கதேசம் இடையேயான நட்பின் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நான் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய - வங்கதேச ஒத்துழைப்புக்கு கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றியைக் கொண்டாடும் தருணம் இது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய உச்சங்களை தொடர்ந்து அடைந்த வண்ணம் உள்ளது. இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள், அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில்கூட நடந்தது கிடையாது.

பல பத்தாண்டுகளாக நிறைவேறாத எல்லை மறு சீரமைப்பு ஒப்பந்தம் இந்த 9 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது. அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இது வித்திட்டுள்ளது. கடல் எல்லை பிரச்சினையையும் நாம் தீர்த்திருக்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில், வங்கதேச தலைநகர் தாக்காவையும், இந்தியாவின் ஷில்லாங், அகர்தலா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களையும் இணைக்கும் நோக்கில் 3 பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020ல் இருந்து இரு நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே உலகின் மிகப்பெரிய கப்பலான கங்கா விலாஸ் கப்பலைத் தொடங்கியதன் மூலம், சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் நமது உள்நாட்டு வர்த்தகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள அகௌரா - அகர்தலா ரயில் இணைப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். வங்கதேசத்துக்கும் இந்தியாவின் வட கிழக்குக்கும் இடையேயான முதல் ரயில் இணைப்பு இது. விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்து வங்கதேசத்துடன் திரிபுரா நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. இதேபோல், மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் 2வது அலகு தொடங்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் இந்திய அரசின் அணுகுமுறை அண்டை நாடான வங்கதேசத்துக்கும் பொருந்தும். வங்கதேச வளர்ச்சியின் மிகப் பெரிய பங்குதாரராக இந்தியா இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா வங்கதேசத்துக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அளித்திருக்கிறது. சாதனைப் பட்டியல் மிக நீண்டது. 3 திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x