Published : 31 Oct 2023 07:34 AM
Last Updated : 31 Oct 2023 07:34 AM

ஊழல் வழக்கில் கைதான மணிஷ் சிசோடியா: ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே வழக்கில் அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவருடைய ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், “இந்த வழக்கை ஆய்வு செய்தபோது, ரூ.338 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது தற்காலிகமாக தெரிய வந்துள்ளது. எனவே, மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகளை 6 முதல் 8 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. ஒருவேளை விசாரணை நடைமுறைகள் மந்தமாக இருந்தால், சிசோடியா மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x