Last Updated : 31 Oct, 2023 04:42 AM

 

Published : 31 Oct 2023 04:42 AM
Last Updated : 31 Oct 2023 04:42 AM

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை

கோப்பு படம்

புதுடெல்லி/பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசும் அந்த மாநில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 15-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்.30-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் கடந்த 5 தினங்களாக 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் வரை 140.099 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 18 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. விவசாய பாசனத்துக்காக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. த‌மிழக விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு அறிவுறுத்த‌ வேண்டும். அதேபோல நிலுவையில் உள்ள 83.705 டிஎம்சி நீரை திறக்கவும் வலியுறுத்த வேண்டும்'' என கோரினார்.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவி வருகிற‌து. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது'' என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா கூறும்போது, ‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவ.15 வரை விநாடிக்கு 2,600 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது அக்.31 முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கனஅடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என பரிந்துரை செய்தார்.

இதற்கு கர்நாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது. கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து பூஜ்யமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது. தற்போது அணைகளில் உள்ள நீரைக் கொண்டே அடுத்த ஆண்டு வரை குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இந்த பரிந்துரையை ம‌றுபரிசீலனை செய்யுமாறு, அடுத்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த இருக்கிறோம்'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x