Published : 30 Oct 2023 03:45 PM
Last Updated : 30 Oct 2023 03:45 PM

கேரள குண்டுவெடிப்பு | சம்பவ இடத்தில் என்எஸ்ஜி விசாரணை; ஆளும் கட்சி மீது பாஜக குற்றச்சாட்டு

களமசேரி: கேரள மாநிலம் களமசேரியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் இன்று (திங்கள்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுமே உள்துறை அமைச்சர் அமித் ஷா என்எஸ்ஜி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று காலை என்எஸ்ஜி கமாண்டோக்கள் அடங்கிய குழுவினர் களமசேரிக்கு வந்தனர். நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் முழுவதுமாக சோதனை செய்து சில மாதிரிகளை சேகரித்தனர். விசாரணையின்போது மாநில போலீஸாரும் வளாகத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.

முதல்வர் அலுவலகம் கோரிக்கை: இது ஒருபுறம் நடக்க மற்றொரு புறம் கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குண்டுவெடிப்பு தொடர்பாக யாரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஊகங்கள் அடிப்படையிலான பிரச்சாரங்களை, வதந்திகளைப் பரப்பக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கூட்டம் நடக்கவிருந்த தலைமைச் செயலக வளாக வாயிலை பாஜகவினர் முற்றுகையிட்டனர். ஆளும் அரசின் அலட்சியத்தாலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டினர்.

இதனிடையே, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கேரளாவில் காணொலி வாயிலாக ஹமாஸ் தலைவர் ஒருவர் உரையாற்றியதை அம்மாநில இடதுசாரி அரசு வேடிக்கை பார்த்தது என்று குற்றஞ்சாட்டினார்.

'பாலஸ்தீன் ஆதரவு இருக்கிறதா என விசாரிக்கவும்' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்வி கோவிந்தன், "களமசேரி சம்பவத்தை உற்று கவனிக்க வேண்டும். உலக நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சூழலில் கேரள மக்களும் பரவலாக பாலீஸ்தானத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராயவும். மாநில அரசும், மக்களும் ஜனநாயக ரீதியாக இவ்வேளையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்" என்றார்.

நடந்தது என்ன? - கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் கவலைக்கிடம்: இந்நிலையில், கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “நேற்றைய குண்டுவெடிப்பில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மூன்று பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் ஐசியுவில் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சியவர்கள் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வருகை: மத்திய் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமசேரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், "நான் இங்கே அரசாங்கத்தின் சார்பில் வந்துள்ளேன். குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புக்குரியவர்கள் இழந்த அவர்களின் துயரம் ஈடுகட்ட முடியாதது. காயமடைந்தவர்கள் எவ்வாறு தேறுகிறார்கள் என்பதை நேரில் காண வந்தேன். சம்பவம் நடந்த இடத்துக்கும் செல்லவிருக்கிறேன். இங்கே உள்ள மருத்துவமனை ஊழியர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின்" என்றார்.

10 நிமிடங்களுக்காக அறை எடுத்த சந்தேக நபர்... - கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நேற்று டொமினிக் மார்டின் என்ற நபர் போலீஸில் சரணடைந்தார். சரணடைவதற்கு முன்னரே அவர் பேஸ்புக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து அதில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தானே காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். அது மட்டுமல்லாது அந்த குறிப்பிட்ட சபைக்கு தான் பல முறை எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களது தேச விரோதப் பார்வையை, பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்றும் அதனாலேயே பழிதீர்த்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் போலீஸ் விசாரணையின்போது சரணடைவதற்கு முன்னர் திருச்சூரில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாகவும், 10 நிமிடங்களில் செக் அவுட் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு விபத்து பற்றிய தகவல் வந்ததால் உடனே செல்வதாக அவர் வரவேற்பறையில் கூறிச் சென்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த 10 நிமிடங்களில்தான் அவர் பேஸ்புக் வீடியோவை பதிவேற்றினாரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x