Published : 05 Jan 2018 03:36 PM
Last Updated : 05 Jan 2018 03:36 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கும் நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:
"இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பகுதி மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது" எனக் கூறினார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டு, முதன் முறையாக, மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டது. அதுபோலவே இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட மாட்டாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். அதுபோலவே மத்திய அரசு கடைசியாக தாக்கல் செய்யும் முழு அளவிலான பட்ஜெட்டும் இதுவே. 2019-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால், அந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தற்போதைய அரசால் தாக்கல் செய்ய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT