Published : 28 Oct 2023 03:18 PM
Last Updated : 28 Oct 2023 03:18 PM

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 2 மணி நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும்” - ராகுல் காந்தி

சத்தீஸ்கரில் ராகுல் காந்தி

கான்கெர் (சத்தீஸ்கர்): மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, "பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை மோடி அரசு வெளியிடாமல் உள்ளது. ஏனெனில், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீட்டைப் பெறாமல் உள்ளனர். புள்ளி விவரத்தை வெளியிட்டால் அது குறித்த உண்மை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால்தான் மோடி அரசு அதனை வெளியிடாமல் உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம். தற்போது மத்தியில் உள்ள அரசு எதை செய்ய மறுக்கிறதோ நாங்கள் அதனை செய்வோம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 26 லட்சம் விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அதைச் செய்யவில்லை. மாறாக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் 3 சட்டங்களைக் கொண்டு வந்தார். அதற்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தார்கள். பாஜகவைப் பொறுத்தவரை அது விவசாயிகளுக்கு எதிரான கட்சி" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x