Last Updated : 05 Jan, 2018 08:38 PM

 

Published : 05 Jan 2018 08:38 PM
Last Updated : 05 Jan 2018 08:38 PM

சேலம் எஃகு உருக்காலை விவகாரம்: தனியாருக்கு தாரைவார்க்க மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு

சேலம் எஃகு உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை சீர்தூக்கி புனரமைக்க வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன் இன்று வலியுறுத்திப் பேசினார்.

இது குறித்து இன்றூ மாநிலங்களவையில் முத்துக்கருப்பன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசியதாவது:

''தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது சிறப்பு தனித்துவம் வாய்ந்த நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சேலம் எஃகு உருக்காலை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதற்காக அப்போதே சேலத்தின் கஞ்சமலை அடிவாரத்தின் கீழ் 2500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. 'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா'வின் ஓர் அங்கமாக இயங்கிவரும் சேலம் எஃகு உருக்காலையை, தொடர் நஷ்டம் ஈட்டி வருகிறது எனக் காரணம் காட்டப்படுகிறது. இதற்காக, இன்று வரை சிறப்பாக இயங்கி வரும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

தொழிலாளர் விரோதக் கொள்கை

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா கடந்த 2015-16 ஆண்டில் ரூ.4,137 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இதில் சேலம் எஃகு உருக்காலையின் நஷ்டம் ரூ.349 கோடி மட்டுமே. அதுவும் கூட பல்வேறு ஒருங்கிணைந்த கூடுதல் செலவினங்கள் காரணமாகவே இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இதன் நிலைமை சீராகி வருகிறது. அப்படி இருக்கையில் சேலம் எஃகு உருக்காலை பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த எத்தனிப்பது தவறானது மட்டுமில்லாமல் தொழிலாளர் விரோதக் கொள்கையாகும்.

மறைமுக சூழ்ச்சி

சேலம் எஃகு உருக்காலையின் பங்குகள், அதன் அதிநவீன இயந்திரங்கள், தற்போதைய சந்தை மதிப்பீட்டில் மிக அதிக விலை போகும் 2,500 ஏக்கர் நிலம் ஆகியவற்றை தனியாருக்கு விற்பது மறைமுக சூழ்ச்சியாகவே கருதப்படும். இதை மனதில் கொண்டு, மத்திய அரசு இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ரூ.2005 கோடி செலவில் சேலம் எஃகு உருக்காலையின் விரிவாக்கப் பணிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க முடிவு எடுத்துள்ளது. எனவே சேலம் எஃகு உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், அதனை சீர்தூக்கி புனரமைக்க வேண்டும்''.

இவ்வாறு முத்துக்கருப்பன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x