Published : 27 Jan 2018 02:46 PM
Last Updated : 27 Jan 2018 02:46 PM

குடியரசு தின பரபரப்பிலும் மறக்கவில்லை… பத்மஸ்ரீ விருது பெற்றவருடன் செல்ஃபி எடுத்த பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்த குடியரசு தின நிகழ்ச்சிகளின் பரபரப்புக்கு இடையேயும் பத்மஸ்ரீ விருது பெற்றவருடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்தவர் கரிமுல் ஹக். இவர் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தனது இரசக்கர வாகனம் மூலம் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறார்.

சாலைவசதி இல்லாத அந்தப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், தனது இருசக்கர ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற உதவுகிறார். இவரின் சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியை காண கரிமுல் ஹக் டெல்லிக்கு வந்து இருந்தார். அப்போது ராஜபாதையில் அணிவகுப்பு மரியாதை முடிந்தவுடன் பிரதமர் மோடி தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது, மரபுகளை மீறி கீழே இறங்கி மக்களிடம் கை கலுக்கி, வணக்கம் தெரிவித்தார்.

அப்போது, கரிமுல் ஹக்கை பிரதமர் மோடி அடையாளம் கண்டுகொண்டார். அவர் அருகே சென்ற பிரதமர் மோடி அவரிடம் பேசினார். அப்போது பிரதமர் மோடியிடம் தன்னுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியுமா? என கரிமுல் ஹக் கேட்டார். அதற்கு பிரதமர் மோடி சம்மதிக்கவே அவரின் மொபைல் போனில் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் அவரிடம் சில நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து சென்றார்.

இது குறித்து கரிமுல் ஹக் நிருபர்களிடம் கூறுகையில், “நான் பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டேன். அவர் சம்மதிக்கவே என்னுடைய சிறிய மொபைலில் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டேன். நான் மக்களுக்கு செய்யும் இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை குறித்து கேட்டறிந்தார்.

எங்கள் கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் பாலம் அமைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன். அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதா என என்னிடம் கேட்டார். அந்த பாலம் கட்டி முடிக்கப்படவில்லை, அதைத்தான் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் என்று தெரிவித்தேன். விரைவில் கட்டி முடிக்கப்படும் என மோடி உறுதியளித்தார்.

என்னுடைய கோரிக்கையை இன்னும் நினைவில் வைத்திருந்த பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். எங்கள் கிராமத்துக்கு விரைவில் பாலம் கிடைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x