Published : 10 Oct 2023 09:05 AM
Last Updated : 10 Oct 2023 09:05 AM

இந்தியா - தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து - முழு விவரம்

தான்சானியா அதிபருடன் இந்திய பிரதமர்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் மூன்று நாள் பயணமாக கடந்த 8ம் தேதி இந்தியா வந்தார். அவருடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள், வர்த்தக சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினரும் வந்தனர். தான்சானியா அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தான்சானியா அதிபரும் இந்திய பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தான்சானியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. இந்திய கடற்படைக்கும் தான்சானியா கப்பல் கழகத்திற்கும் இடையே வெள்ளை கப்பல் தகவல்களைப் பகிர்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம். 3. 2023-2027 ஆம் ஆண்டுகளில் இந்தியா - தான்சானியா இடையிலான கலாச்சார பரிமாற்றத் திட்டம். 4. தான்சானியாவின் தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 5. இந்திய துறைமுகங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்திற்கும் தான்சானியா முதலீட்டு மையத்திற்கும் இடையே தான்சானியாவில் ஒரு தொழில் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 6. கொச்சின் கப்பல் கட்டும் தளம் மற்றும் தான்சானியாவின் மரைன் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் இடையே கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: "இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்திய-தான்சானியா உறவை உத்திசார் கூட்டு ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதாக இரு தலைவர்களும் அறிவித்தனர். கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது உதவும் என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.

வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு ஆணைக்குழு செயல்முறை வாயிலாக உயர்மட்ட அரசியல் கலந்துரையாடல்களை தொடர்வதற்கும், தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு சந்திப்புக்களுக்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். 2023 ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் அருஷாவில் நடைபெற்ற 2 வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 2022 மே 31 மற்றும் 2023 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் தார் எஸ் சலாமில் இரண்டு முறை பாதுகாப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியதைக் கருத்தில் கொண்டு, இதில் பல இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இரு தரப்பினரும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இந்தியாவும் தான்சானியாவும் பொதுவான கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் கடல்சார் அண்டை நாடுகள் என்பதை ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். தான்சானியாவின் முக்கிய துறைமுகங்களில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட நீரியல் ஆய்வுகளை தான்சானியா தரப்பு பாராட்டியது. இரு தலைவர்களும் தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையே பரஸ்பர செயல்பாட்டை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இந்தியாவுக்கும் தான்சானியாவுக்கும் இடையே வணிக கப்பல் தகவல்களைப் பகிர்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு இரு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

சுற்றுலா, கடல்சார் வர்த்தகம், சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கடல் அறிவியல் ஆராய்ச்சி, கடற்பரப்பு சுரங்கத் திறன், கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நீல பொருளாதாரத் துறையில் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல்பட தான்சானியா தரப்பு விருப்பம் தெரிவித்தது. இருதரப்பு வர்த்தக அளவை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர், இதற்காக, வர்த்தகத்தின் புதிய பகுதிகளை ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தான்சானியாவுக்கான முதல் ஐந்து முதலீட்டு ஆதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும். தான்சானியாவில் முதலீட்டுப் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

உள்நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இந்தியாவின் வரியில்லா கட்டண முன்னுரிமை (டி.எஃப்.டி.பி) திட்டத்தைப் பயன்படுத்தி தான்சானியாவிலிருந்து 98சதவீத தயாரிப்புகள் வரியின்றி இறக்குமதி செய்யப்படும் உறவுகளில் விவசாயத் துறை ஒத்துழைப்பு ஒரு வலுவான தூணாக இருப்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். தண்ணீர், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, உதவித்தொகை மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) ஆகிய துறைகளில் இந்தியாவின் உதவியை தான்சானியா பாராட்டியது.

குடிநீர் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் பாதுகாப்புத் துறைகளை உள்ளடக்கிய 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை தான்சானியாவுக்கு இந்தியா வழங்கிய கடன்கள் (எல்ஓசி) குறித்தும் இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்திய கல்வி உதவித்திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் தமது மனிதவள மேம்பாட்டிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று தான்சானியா தரப்பு பாராட்டியது. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (யுபிஐ) மற்றும் டிஜிட்டல் தனித்துவ அடையாளம் (ஆதார்) உள்ளிட்டவற்றிலும் விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு துறைகளிலும் ஒத்துழைப்பை இந்திய தரப்பு வழங்கியுள்ளது.

தான்சானியாவின் பெம்பா, சான்சிபாரில் ஒரு தொழிற்பயிற்சி மையத்தை (வி.டி.சி) நிறுவுவதற்கும் உள்ளூர் சந்தையின் கோரிக்கைகளின் அடிப்படையில் படிப்புகளை வடிவமைப்பதற்கும் இந்தியாவின் ஆதரவை தான்சானியா தரப்பு வரவேற்றது. தார் எஸ் சலாம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலும், நெல்சன் மண்டேலா ஆப்ரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியிலும் (என்.எம்.ஏ.ஐ.எஸ்.டி) இரண்டு ஐ.சி.டி மையங்களை அமைப்பதற்கான இந்தியாவின் முடிவை தான்சானியா பாராட்டியது.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) முதல் வெளிநாட்டு வளாகத்தை சான்சிபாரில் நிறுவுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். சான்சிபாரில் உள்ள ஐ.ஐ.டி ஆப்பிரிக்க கண்டத்தில் தொழில்நுட்பக் கல்விக்கான முதன்மை மையமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆகஸ்ட் 23, 2023 அன்று சந்திரயான் -3 லேண்டரை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக தான்சானியா தரப்பு இந்திய தரப்பை வாழ்த்தியது. தான்சானியாவுக்கு விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை இந்திய தரப்பு வழங்குவதற்கு தான்சானியா தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் சிறந்த ஒத்துழைப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். சுகாதாரத் துறையில் மேலும் ஒத்துழைத்து பணியாற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு 10 ஆம்புலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியதை தான்சானியா தரப்பு பாராட்டியது. கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம், அத்தியாவசிய மருந்துகள், செயற்கை கால்கள் பொருத்தும் முகாம் உள்ளிட்ட மானியத் திட்டங்களை செயல்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பின் சிறந்த சாதனையை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். இது 520 தான்சானியா நோயாளிகளுக்கு பயனளித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மக்கள் தொடர்புகள், கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி தொடர்புகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர். கலாச்சார பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இரு தரப்பு கலாச்சாரக் குழுக்களின் தற்போதைய பரிமாற்றத்தை இரு தரப்பினரும் குறிப்பிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றங்களை மேலும் அதிகரிக்க முடிவு செய்தனர். தான்சானியாவில் கபடி விளையாட்டின் புகழ் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து இரண்டு கபடி பயிற்சியாளர்களை நியமித்ததற்காக தான்சானியா தரப்பு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தது.

இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். 2023 ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே ஆப்பிரிக்க மனித மூலதன நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு மற்றும் ஆப்பிரிக்க உணவு அமைப்புகள் உச்சி மாநாடு ஆகிய இரண்டு முக்கிய உச்சிமாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக தான்சானியாவுக்கு இந்தியத் தரப்பு வாழ்த்து தெரிவித்தது.

கிழக்கு ஆப்பிரிக்க சமூகத்துடனான (ஈ.ஏ.சி) தொடர்புகளை அதிகரிப்பதில் தான்சானியாவின் ஆதரவுக்கு இந்திய தரப்பு நன்றி தெரிவித்துள்ளது. சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருப்பதை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர். இரு தரப்பினரும் ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கெடுத்து, பிராந்திய பாதுகாப்பு முன்முயற்சிகளுக்கு பங்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் தான்சானியாவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு வகை உறுப்பினர்களையும் விரிவுபடுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டன. வெற்றிகரமான ஜி 20 தலைமைப் பதவி மற்றும் 2023 செப்டம்பரில் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி 20 புது தில்லி தலைவர்களின் பிரகடனத்திற்காக தான்சானியா தரப்பு இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தது.

சர்வதேச புலிகள் கூட்டணி (ஐ.பி.சி.ஏ) மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) ஆகியவற்றில் சேருவதற்கான தான்சானியாவின் முடிவை இந்தியத் தரப்பு வரவேற்றது. இரு தலைவர்களும் பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டித்தனர். உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயங்கரவாதம் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்." இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x