Published : 29 Dec 2017 03:14 PM
Last Updated : 29 Dec 2017 03:14 PM

ஆர்எஸ்எஸ் தலைவர் தேசியக்கொடி ஏற்ற அனுமதித்த பள்ளி மீது நடவடிக்கை: கேரள முதல்வர் உத்தரவு

கேரளாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி கொடியேற்ற அனுமதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காட்டில் உள்ள கரங்கியம்மன் பள்ளியில் ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தினத்தின்போது, பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும், அரசியல் தலைவர்கள் கொடியேற்ற அனுமதிக்க முடியாது என கூறி இந்த தடை விதிக்கப்பட்டது.

எனினும் தடையை மீறி, அந்த பள்ளியில் மோகன் பகவத், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்யும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் மீது காவல்துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யவும், முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறுகையில் "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசியல் கட்சித் தலைவர் அல்ல. அவர் கொடியேற்றியதில் தவறு ஏதுமில்லை. கேரள அரசின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். இதனை சட்டப்படியாக சந்திப்போம்" எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x