Published : 04 Oct 2023 03:51 PM
Last Updated : 04 Oct 2023 03:51 PM

தர்மசாலாவில் ஜல்சக்தி அலுவலக சுவரில் தீட்டப்பட்ட காலிஸ்தான் ஆதரவு கோஷம்

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அலுவலகத்தில் சில விஷமிகள் 'காலிஸ்தான் வாழ்க' (Khalistan Zindabad) என்று ஸ்ப்ரே பெயின்ட் கொண்டு எழுதிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காங்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி கூறுகையில், “செவ்வாய்க்கிழமை இரவு சில விஷமிகள் ஸ்ப்ரே பெயின்ட் கொண்டு ஜல்சக்தி அலுவலக சுவரில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று எழுதியிருந்தனர். அது குறித்த தகவல் கிடைத்ததுமே காவல் துறை விரைந்து சென்று சுவரில் இருந்த கோஷத்தை அழித்தது. சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 2023 தொடரின் ஐந்து போட்டிகள் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் தீட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

காலிஸ்தான் சர்ச்சையின் பின்னணி: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1980-1990 காலகட்டத்தில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் தலைதூக்கின. காலிஸ்தான் பெயரில் தனி நாடு கோரி அந்த அமைப்புகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் பிரிவினைவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டன. இதனால், அந்த அமைப்புகளை சேர்ந்த பலர், கனடாவுக்கு தப்பினர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியது.

இந்தச் சூழலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தூண்டுதலால் கனடாவை சேர்ந்த சில சீக்கியர்கள் சமீபகாலமாக மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிவருகின்றனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஐஎஸ்ஐ அமைப்பும் தாராளமாக நிதியுதவி, ஆயுதங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறிய ஹர்தீப் சிங் நிஜார் என்பவர், ‘காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ (கேடிஎஃப்) என்ற அமைப்பின் தலைவராக இருந்து, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை தேடப்படும் தீவிரவாதியாக இந்திய அரசு கடந்த 2022-ல்அறிவித்தது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை வலியுறுத்தியும், கனடா அரசு ஏற்கவில்லை.

இந்த நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உள்நாட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கும் தர்மசாலாவில் காலிஸ்தான் கோஷம் எழுந்துள்ளது கவனம் பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x