Last Updated : 04 Oct, 2023 05:02 AM

 

Published : 04 Oct 2023 05:02 AM
Last Updated : 04 Oct 2023 05:02 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

கோப்புப்படம்

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய இடங்களில் இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, மடிக்கேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பக‌லாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

கடந்த 24 மணி நேரத்தில் மடிக்கேரியில் 75.76 மி.மீ., விராஜ்பேட்டையில் 45 மி.மீ., சோமவார்பேட்டையில் 48.72 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ரங்கப்பட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 18,552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2,597 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 1,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய‌ அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 2,000 கனஅடிக்கும் குறைவாகவே நீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு நீரை திறக்க கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக‌ காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் அதிகமாக‌ உயர்ந்தால் தமிழகத்துக்கு நீரை திறப்பதில் சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x