Published : 03 Oct 2023 04:58 AM
Last Updated : 03 Oct 2023 04:58 AM

விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைத்தது உயர் நீதிமன்றம்

கொச்சி: குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெற்றோரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அந்தக் குழந்தைக்கு கேரள உயர் நீதிமன்றம் பெயர் வைத்து பிரச்சினையைத் தீர்த்துள்ளது.

கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த பின்னர் குடும்பச் சண்டை காரணமாக இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெண் குழந்தையாததால் குழந்தையை, தாய் பராமரித்து வருகிறார். ஆனால், அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்க முடியாமல் போனது. இந்நிலையில் குழந்தையின் தாயார், புண்யா என்ற பெயரையும், குழந்தையின் தந்தை, பத்மா நாயர் என்ற பெயரையும் வைப்பதாக ஏற்கெனவே பேசியிருந்தனர்.

குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அந்தச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படவில்லை. பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் இருந்ததால், பள்ளியில் குழந்தையைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தனது கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் குழந்தையின் தாய் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது: பெற்றோருக்கு இடையேயான தகராறைத் தீர்த்து வைத்த பிறகு பெயர் வைப்பது காலதாமதத்துக்கு வழி வகுக்கும். எனவே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தந்தை பரிந்துரைத்த பெயரையும், தாயார் பரிந்துரைத்த பெயரையும் சேர்த்து, புண்யா பாலகங்காதரன் நாயர் அல்லது புண்யா பி. நாயர் என்று பெயர் வைக்கிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி மேலும் கூறும்போது, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தநிலையில், குழந்தை தாயுடன் வசித்து வருவதால் தாய் பரிந்துரைத்த பெயருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பெயரில், தந்தையின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x