Published : 14 Dec 2017 01:21 PM
Last Updated : 14 Dec 2017 01:21 PM

தெலங்கானாவில் என்கவுன்டர்: மாவோயிஸ்ட்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. இதில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், டெக்கலபல்லி வனப்பகுதியில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் மாவோயிஸ்ட்டுகள் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக பத்ராத்ரி எஸ்.பி. அம்பர் கிஷோர் ஷாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில், போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் டெக்கலபல்லி வனப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய, விடிய ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த மாவோயிஸ்ட்டுகளின் கூட்டம், போலீஸாரைக் கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்டுகளும் அதிகாலை வரை பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 8 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன. இறந்தவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு பத்ராத்ரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பிஓடிய மாவோயிட்டுகளை தேடும் பணி தொடர்வதாகவும், என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து 2 எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் மற்றும் 6 கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாவும் பத்ராத்ரி மாவட்ட எஸ்.பி. அம்பர் கிஷோர் ஷா, காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x