Published : 01 Oct 2023 07:58 PM
Last Updated : 01 Oct 2023 07:58 PM

''மகாத்மா காந்தியின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும்'' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள்

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு | கோப்புப்படம்

புதுடெல்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாட்டின் நலனுக்காக காந்தியின் விழுமியங்கள், போதனைகள், செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், "நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும், தேச தந்தைக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். காந்தியின் அடையாளமான உண்மை மற்றும் அகிம்சை உலகிற்கே புதிய பாதையைக் காட்டியது. காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காக மட்டும் போராடவில்லை. துய்மையை பேணுதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், தற்சார்பு, விவசாயிகள் உரிமை, ஆகியவைகளுக்காகவும், தீண்டமை கொடுமை, சமூக பாகுபாடு, அறியாமை ஆகியவற்றை எதிர்த்தும் அவர் போராடினார். சுதந்திர போராட்டத்தில் மக்களை அதிக அளவில் பங்கெடுக்க வைத்து நாடு விடுதலையடைய காந்தி வழிவகுத்தார்.

மார்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்ற பல்வேறு உலகத்தலைவர்கள் காந்தியின் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றுள்ளனர். அவரது வலிமையான துடிப்பு மிக்க எண்ணங்கள் எப்போதும் உலகுக்கு நெருக்கமானவையாக இருக்கும். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் நலனுக்காக மக்கள் அனைவரும் காந்தியின் விழுமியங்கள், போதனைகள், செயல்களை பின்பற்ற வேண்டும்" என்று குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x