Published : 01 Oct 2023 03:51 AM
Last Updated : 01 Oct 2023 03:51 AM

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7-ம் தேதி வரை அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், அதேநேரத்தில் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், அவற்றுக்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாட்டை நிறுத்தும் நோக்கில், அவற்றைத் திரும்பப் பெறப்போவதாக கடந்த மே மாதம் 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதால், இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக ரிசர்வ்வங்கி தெரிவித்தது. பொதுமக்கள் வங்கியில் சென்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள 2023 செப்.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அக்.7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி முதல் வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், தேவைப்படுவோர் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மே 19-ம் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இவற்றில் ரூ.3.42 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. மீதம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x