Published : 26 Dec 2017 08:20 AM
Last Updated : 26 Dec 2017 08:20 AM

பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி எரிபொருள் செலவை சேமியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மெட்ரோவின் மெஜந்தா ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நொய்டாவில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டில் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க விரும்புகிறேன். எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கு பலவகை பொதுப் போக்குவரத்து வசதி உதவியாக இருக்கும். சாமானிய மக்கள் பணத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

2002-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் டெல்லி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணமாகும். அப்போது முதல் டெல்லி மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தகுந்த வகையில் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது.

மக்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். தனி வாகன பயன்பாட்டுக்கு பதிலாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் எரிபொருள் செலவை சேமிக்க வேண்டும். மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை கவுரவமாக கருதவேண்டும்.

நாட்டின் அனைத்து துறை வளர்ச்சிக்கு சிறந்த நிர்வாகம் அவசியமாகும். பொதுத் திட்டங்களை பொறுத்தவரை இதனால் நமக்கு என்ன பயன்? இதுபற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற மனோபாவம் கூடாது. எங்களை பொறுத்தவரை தேசிய நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசியல் ஆதாயம் கருதி அல்ல. இந்தியா வளமான நாடு. சிறந்த நிர்வாகம் இல்லாததால் அதன் பலனை நம்மால் அனுபவிக்க முடியவில்லை. இதனை மாற்ற நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். பலருக்கு இது கடினமான முடிவாக உள்ளது. நாங்கள் வந்தவுடன், அதிகாரிகள் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வருவதாக நாளேடுகளில் செய்தி வெளியாகின. அரசு ஊழியர்கள் மக்களுக்கு பதில் சொல்ல மிகவும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

டெல்லி மெட்ரோவின் மெஜந்தா ரயில் சேவை 12.6 கி.மீ. தொலைவு கொண்டது. தெற்கு டெல்லியின் கல்காஜி நிலையத்தில் இருந்து நொய்டா தாவரவியல் பூங்கா வரை இயக்கப் படுகிறது.

தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு ஒக்லா பறவைகள் சரணாலயம் வரை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x