Published : 21 Sep 2023 02:59 PM
Last Updated : 21 Sep 2023 02:59 PM

“நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்” - மகளிர் மசோதா குறித்து பிரதமர் மோடி சிலாகிப்பு

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னான தருணம்” என்று சிலாகித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நான்காவது நாளில் இன்று மக்களவைக் கூடியது. அப்போது சிறிய உரையாற்றுவதற்காக எழுந்த பிரதமர் மோடி, "இந்த அவையின் தலைவர் என்ற முறையில் இந்தப் புனிதமான பணியில் பங்களிப்பு செய்த, ஆதரவளித்த, ஆக்கபூர்வமாக விவாதித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான மசோதா நிறைவேற்றியதன் பெருமை, அவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சேரும்.

மக்களவையில் புதன்கிழமை எடுக்கப்பட்ட முடிவும், மாநிலங்களவையில் வியாழக்கிழமை வர இருக்கும் முடிவும் தாய் சக்தியின் நிலையை மாற்றும். அது உருவாக்கும் நம்பிக்கை, நாட்டை கற்பனை செய்யமுடியாத அளவிலான உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சக்தியாக உருவெடுக்கும்" என்று பிரதமர் மோடி நெகிச்சியுடன் தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தின் இரண்டாவது நாளில் மக்களவையில், பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் புதன்கிழமை மக்களவையில் எட்டு மணி நேரம் நடந்து மாலையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதராவாக 454 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குபிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, அதன்பிறகு நடக்கும் தேர்தலில்தான் அமலுக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x