Published : 20 Sep 2023 08:23 PM
Last Updated : 20 Sep 2023 08:23 PM

மக்களவையில் நிறைவேறியது மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா!

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் சக்தி இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதா முழுமை அடையாது. பட்டியலின, பழங்குடியின மற்றும் ஒபிசி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் கூறும்போது, "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை.

பாஜக உண்மையாகவே இந்த மசோதாவை விரும்பி இருந்தால், 2021-ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்கள். அதோடு, இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்திருக்கும். ஆனால், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், 2029ம் ஆண்டு தேர்தலின்போதுதான் இது அமலாக வாய்ப்புள்ளது. பாஜகவின் திட்டம் தெளிவாகிவிட்டது" என விமர்சித்துள்ளார்.

திமுக மக்களவை எம்.பி கனிமொழி பேசும்போது, “இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். அவரது உரையை முழுமையாக வாசிக்க > ‘மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா’ சலுகை அல்ல, பெண்களின் உரிமை: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

சோனியா பேச்சு: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது?

இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

திருமாவளவன் பேச்சு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதாவை நான் வரவேற்று ஆதரிக்கிறேன். பெண்கள் ஒடுக்கப்பட்டு, வீட்டிலேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு பணிவிடை செய்வதே அவர்களின் வாழ்வு என்று மாறிப்போனது. பிறந்தது முதல் இறக்கிற வரை ஆண்களை நம்பியே வாழ வேண்டிய சமூக அமைப்பை இந்த மண்ணில் நாம் உருவாக்கி இருக்கிறோம். இதுதான் இன்றைக்கு நமது குடியரசுத் தலைவரையே நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பழங்குடி பெண் என்பதாலா அல்லது கணவனை இழந்த கைம்பெண் என்பதாலா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆள்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர வைத்துவிட்டு அவரை செயல்படவிடாமல் இருக்கச் செய்வது பாவத்திலும் பெரும் பாவம்.

அந்த வகையில் இந்த இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் ஒரு சமூகத்துக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முன்வந்திருப்பது அதுவும் ஏதோ இரக்கப்பட்டுத் தருவதைப் போல தருவது சரியா? இந்த மசோதா நிறைவேறப் போகிறது. ஆனால், எப்போது அமலுக்கு வரப்போகிறது என்ற கேள்வி உள்ளது. 2033-ல்தான் இது நடைமுறைக்கு வரும் என்ற நிலை உள்ளது.

எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போகிறோம், எப்போது தொகுதி மறுவரையறை செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த மசோதாவை உடனே அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல் இதனை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நாடக அரசியல் இது” என்று திருமாவளவன் பேசினார்.

கடந்து வந்த பாதை: கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.

அதன்படி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

2029-ல் அமலாகும்: இந்த மசோதா தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: நாரி சக்தி வந்தன் மசோதா என்பது 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும். இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது. வரும் 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும். சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x