Published : 17 Sep 2023 01:06 AM
Last Updated : 17 Sep 2023 01:06 AM

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80. டெல்லியில் அவரது இல்லத்தில் வயோதிக பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

எழுத்தாளர், ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட கீதா மேத்தா, ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் மற்றும் கியான் பட்நாயக்கின் மூத்த மகள் ஆவார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த அவர், 'கர்ம கோலா', 'ஸ்னேக் அண்ட் லேடர்ஸ்', 'எ ரிவர் சூத்ரா', 'ராஜ்' மற்றும் 'தி எடர்னல் கணேஷா' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஒடிசா மாநில தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் தொழிலதிபர் பிரேம் பட்நாயக் இருவரும் கீதா மேத்தாவின் இரு சகோதரர்கள். என்றாலும், நவீன் பட்நாயக் உடன் கீதா மேத்தா மிக நெருக்கமானவர் என அறியப்படுகிறது.

கீதா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, "எழுத்தாளர் ஸ்ரீமதி கீதா மேத்தா ஜியின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு பன்முக ஆளுமை. அறிவுத்திறன் மற்றும் எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் ஆகியவற்றிற்றுக்காக அறியப்பட்டவர். இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிலும் ஆர்வமாக இருந்தார் அவர். துயரமான இந்த நேரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தின் உடன் எனது எண்ணங்கள் இருக்கும். ஓம் சாந்தி." இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x