Published : 26 Dec 2017 10:11 AM
Last Updated : 26 Dec 2017 10:11 AM

திருமலையில் அலைமோதும் பக்தர்கள்: தரிசனத்துக்கு 14 மணி நேரம் காத்திருப்பு

தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வைகுண்ட காம்ப்ளக்ஸுக்கு வெளியே சுமார் 4 கி.மீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை நேற்று தரிசித்தனர். இதனால் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் ஆனது.

சனி, ஞாயிறு, மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து விடுமுறை வந்ததால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். இதனால் சுவாமியை சர்வ தரிசனம் மூலம் தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி பட்டு வருகின்றனர். மேலும், லட்டு வாங்கவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து கிடக்கின்றனர். அன்னதான மையத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருமலையில் பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க நேற்று 14 மணி நேரம் ஆனது. பாதசாரியாக மலையேறி சென்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தனர். ஸ்லாட் முறையில் டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கூட சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்த பிறகே சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்டம் காம்ப்ளக்ஸுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் சுமார் 4 கி.மீ தொலைவிற்கு நேற்று பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். இவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் போன்ற வசதிகளை தேவஸ்தான ஸ்ரீவாரி பக்தர்கள் உடனுக்குடன் வழங்கினர்.

ஊழியர்கள் முறைகேடு

கூட்டம் அதிகமாக இருப்பதை சில தேவஸ்தான ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். ரூ.300 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளை ‘ரொட்டேஷன்’ முறையில் மீண்டும், மீண்டும் அதே டிக்கெட்டுகளை பக்தர்களிடம் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று தரிசனத்திற்கு நேற்று அனுமதித்தனர். இதனை அறிந்த தேவஸ்தான கண்காணிப்பு குழு அதிகாரிகள் 2 தேவஸ்தான ஊழியர்களை பிடித்து திருமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x